இரவு வேட்டை
பல இரவுகளில் நான் சந்தித்திருக்கிறேன்
அந்த மிருகத்தை
அனகொண்டாவின் வீரியமும்
காட்ஸில்லாவின் தினவுமாய் திரியும்
படுக்கை விரிப்பில்
அதனுடைய அவசரமெல்லாம்
ஆப்பிள் கடிப்பதிலும்
அதனுடைய
அவஸ்தையெல்லாம்
தாமரைப்
பூவுக்குள் நுழைவதும் தான்
இம்மியும்
எண்ணியது இல்லை மனக் காயங்களை
தோழிகளும்
சொல்லியிருக்கிறார்கள்
இதுபோல்
ஒரு மிருகத்தைப் பற்றி
ஓநாய்க்கு
அஞ்சும் மான்குட்டிகளாய்
ஓடி ஒளிந்தாலும் அதன் கூரியப் பற்களில்
சிக்கிச் சிதலமான கதைகளை
மெல்ல அடியெடுத்து வைக்கும் செங்கிஸ்கான் குதிரையாய்
எருமை புகுந்த ஆம்பல் தடாகம்
ஆகும் நம் உடம்பு
தவிர்த்தல்
இயலாமல் வசப்பட்டு வசப்பட்டு
நம்மை இழந்த பின்
விடியலில்
மிச்சம் இருப்பது என்னவோ
நண்டூர்ந்து
சென்றது போல நகக் குறிகள்
மட்டுமே
சூரியனில் மாறிவிடும் அதன் சுபாவம்
சுடச் சுடச் கேட்கும்
தேநீர்
நிர்வாணமற்ற வசீகர ஆடைகள் பரிந்துரைக்கும்
கைப்பையும் அலுவலகக் கோப்புகளுமாய்
காசுமரமாகிவிட வேண்டும் இரவில் பூத்தக் காம
மரம்
ஒவ்வொரு
கதவுக்குள்ளும் திரியும்
மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள
முத்திரை
என்னவோ ”பெண்கள்
ஜாக்கிரதை”
(நன்றி
- உயிர் எழுத்து)
ஜெயதேவன்