கண்ணாடி நகரம்
எத்தனை
மாலைப் பொழுதுகளை
சாப்பிட்டு ஜீரணிக்க முடியும்
என்னாலும் என் கிராமத்துக் குளத்து
மீன்களாலும்
கண்ணாடித்
தொட்டியின் பொன் மீன்களும்
இனிப்பாய்த்
தான் இருக்கின்றன
அடுக்குமாடிக்
குடியிருப்பில்
ஆடுகளுடன்
நாமும்
அசைபோட்டு
சலித்து விடுகிறது
வெயில்
நேரத்து வேப்பமர நிழல்கூட
“ ஹுண்டாய்”
குளிர் சாதனம் சலிப்பு தரவில்லை
“மல்லிகா
ஷெராவத்” மாதிரி
ஆற்று நீரள்ளிப் பருகும் சுகம்
அலாதியானதுதான்
வெட்டி வேரிட்ட குடத்து
நீரும் கூட
அக்குவாபினாவின் பாட்டிலில் கூட
தெரியத்தானே
செய்கிறது
சிறுவாணியும் தாமிரபரணியும்
சலித்தெடுத்த வயல் வெளிக் காற்றில்
‘கண்ணதாசன்’ தொட்டுவிட்டுப் போகலாம்
கிழக்குக் கடற்கரையின் மென்காற்றும் கூட
“மைக்கேல்
ஜாக்ஸனின்’ பாதங்கள் போலத்தான்
புழுதித்
தரைகளும்
கட்டைவண்டித் தடங்களும்
என் பாட்டியின் சுருக்குப் பையை
நினைவூட்டும்
தங்க நாற்கரச் சாலையில் தெரிகிறது
ஷெர்ரி
பழத்தின் வளவளப்பும்
உலகைச் சுருட்டி வைத்த
முட்டை ஓடும்
கரிசல்
காட்டின் பாதவெடிப்புகளை விட
மோசமில்லை
பிளீச் செய்யப்பட்ட
நாகரீக முகங்களும்
பௌடர் பூசிய நகர வீடுகளும்
( நன்றி – கணையாழி)
ஜெயதேவன்
No comments:
Post a Comment