Friday, October 31, 2014

இரவு வேட்டை

பல இரவுகளில் நான் சந்தித்திருக்கிறேன்
 அந்த மிருகத்தை
 அனகொண்டாவின் வீரியமும்
 காட்ஸில்லாவின் தினவுமாய் திரியும்
 படுக்கை விரிப்பில்

 அதனுடைய அவசரமெல்லாம்
 ஆப்பிள் கடிப்பதிலும்
அதனுடைய அவஸ்தையெல்லாம்
தாமரைப் பூவுக்குள் நுழைவதும் தான்
இம்மியும் எண்ணியது இல்லை மனக் காயங்களை

தோழிகளும் சொல்லியிருக்கிறார்கள்
இதுபோல் ஒரு மிருகத்தைப் பற்றி
ஓநாய்க்கு அஞ்சும் மான்குட்டிகளாய்
ஓடி ஒளிந்தாலும் அதன் கூரியப் பற்களில்
 சிக்கிச் சிதலமான கதைகளை

மெல்ல அடியெடுத்து வைக்கும் செங்கிஸ்கான் குதிரையாய்
எருமை புகுந்த ஆம்பல் தடாகம் ஆகும் நம் உடம்பு
தவிர்த்தல் இயலாமல் வசப்பட்டு வசப்பட்டு
நம்மை இழந்த பின்
விடியலில் மிச்சம் இருப்பது என்னவோ
நண்டூர்ந்து சென்றது போல நகக் குறிகள் மட்டுமே

 சூரியனில் மாறிவிடும் அதன் சுபாவம்
 சுடச் சுடச் கேட்கும் தேநீர்
 நிர்வாணமற்ற வசீகர ஆடைகள் பரிந்துரைக்கும்
 கைப்பையும் அலுவலகக் கோப்புகளுமாய்
 காசுமரமாகிவிட வேண்டும் இரவில் பூத்தக் காம மரம்

ஒவ்வொரு கதவுக்குள்ளும் திரியும்
 மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள
முத்திரை என்னவோ  ”பெண்கள் ஜாக்கிரதை”
                                (நன்றி - உயிர் எழுத்து)

ஜெயதேவன்

No comments:

Post a Comment